அன்று மாலை ஞாயிற்றுக்கிழமை போல் அமைதியாக இருந்தது. இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்யலாமென்று மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்தேன். மதியம் பிரெட் சாண்ட்விச்சில் ஓடியது. சாதம், சாம்பார் வேண்டாம். ஏதாவது சிற்றுண்டி செய்யலாம் என்று நினைத்தேன். அவ்வளவுதான். மேலே வேறு யோசனையின்றி அடைக்கு ஊறப்போட்டேன். அப்படியே நினைவுகளையும் கொஞ்சம் ஆறப்போட்டேன்.
கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் ஒன்று புலப்படுகிறது, சிற்றுண்டிகளில் இந்த அடைக்கு நாம் அதற்குண்டான மரியாதையை கொடுப்பதில்லையோ. சற்று இவைகளைப் பாருங்களேன்.
"அம்மா நாளைக்கு காலை சீக்கிரம் கிளம்பனும்".
"சரிடா இட்லி பண்ணிடறேன்" - அம்மா
"என்னங்க சாயங்காலம் வர லேட்டாகும் தோசை மாவு ஃபிரிட்ஜில இருக்கு, பார்த்துக்கங்க..."
எப்போதும் அவசரத்திற்கு இட்லி, [அரைத்த] தோசையை தான் உதவிக்கழைக்கிறோம். இல்லை உடனடி தேவையாக இருந்தால் கரைத்த தோசை, உப்புமாதான். தெருவோர கடைகளில் கூட இட்லி தோசைதான் விற்கிறார்கள். இன்னும் இட்லி, தோசை, உப்புமா போன்ற திடீர் மிக்ஸ்கள் கிடைக்கின்றன் ஆனால் அடை மிக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறோமா? பொதுவாக அடை எப்போதும் சட்டென்று தோன்றும் தீர்வாக இருப்பதில்லை. இதற்கான காரணம்தான் என்ன? இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் இதற்கு அடையின் அடக்கமே காரணமென்று தோன்றுகிறது!
திருதராஷ்டிரன் சபையில் பீஷ்மரைப் போல் சிற்றுண்டிகளில் அடை. எல்லோரையும்விட வல்லவர் ஆனாலும் ஒரு அவையடக்கம். அடையில் அரிசிக்கு சமமாக அனைத்து பருப்புகளும் இருக்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் [தமிழ்ல என்னங்க?] புரதச்சத்து எல்லாம் வேண்டிய அளவு இருக்கிறது. ஊரப்போட்ட இரண்டு மணி நேரத்தில் அரைத்து வார்க்க அடைமாவு தயார். சாதாரணமாக ஒருவர் இரண்டு அல்லது மூன்று அடை உண்டாலே வயிறு நிரைந்துவிடும். இப்படி ஒரு முழுமையான பண்டமாக இருந்தாலும் அவசர யுகத்தில் தோசை இட்லியுடன் முண்டியடிக்காமல் ஒரு அடக்கம் [அதாங்க அவையடக்கம்] காக்கிறது. இதுவே இதன் சிறப்புமாகும்.
ஊறவைத்த ஒரு குவளை அரிசிக்கு ஒரு குவளை ஊறவைத்த பருப்பு [துவரை+கடலை+கொஞ்சம் உளுந்து] மிளகாய் வற்றல்கள், கொஞ்சம் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்த மாவில் இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து சற்று மிதமான தீயில் வார்த்தெடுத்தால் அடை தயார் [
செய்முறைகள் இங்கே] . இதில் கொஞ்சம் கொண்டகடலை சேர்த்தரைப்பதும் ஒரு வகை. நவீன உனவுப் பதார்த்தங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பீட்சாவை போன்று அடையும் பல டாப்பிங்குகளில்[toppings] செய்யலாம்.
முருங்கைக்கீரை அல்லது கைக்கெட்டும் சில கீரைவகைகள், முட்டைகோஸ், காரெட், வெங்காயம் போன்றவை பொதுவாக பயன்படுத்தபடும் டாப்பிங்காகும். அடை வார்க்கும் கல்லில் ஒரு கரண்டி மாவைவிட்டு தோராயமாக வட்டவடிவில் அல்லது டெட்டிபேர் [teddy bear] போன்று தங்கள் கற்பனைக்கு எட்டும் வடிவில் தட்டி இந்த டாப்பிங் ஏதேனும் மேலே தூவவும். அடையின் ஓரத்தை சுற்றி எண்ணை/நெய் விடவும். அடை நன்றாக வேக நடுவிலோ அல்லது தங்களின் வடிவகணித ஞானத்தை பயன்படுத்தி வேறு தோதான இடங்களில் சில ஓட்டைகள் ஏற்படுத்தி ஓரிரு முட்டை எண்ணை விடவும். அடையின் மேற்பகுதிவரை வெந்தபின் அடிப்பகுதி நன்றாக சிவந்தவுடன் திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்களில் இந்தப் பக்கமும் சிவந்தவுடன் எடுத்தால் அடை சாப்பிட தயார். தயாரான அடை கீழே லா.ச.ரா வர்ணிப்பதுபோல் இருந்தால் பிரமாதம். அடையுடன் கூட சாப்பிட வெறும் வெல்லம் அல்லது மிளகாய்ப்பொடி மற்றும் அவியல், சாம்பார் போன்ற வெங்சனங்கள் மிக பிரபலம்.

இன்றைய தேதியில் ஒவ்வொரு நவீன சந்தைப் பொருளுக்கும் ஒரு மினி உரு இருப்பதுபோல் அடைக்கும் மினிஅடை உருவமொன்று இருக்கிறது. அதுதான் தவலைஅடை [கீழே படம் காண்க].

நவீன பண்டங்களின் மற்றொரு அடையாளமான வெரைட்டியும் அடைக்குள்ளது. கோதுமை அடை, கேள்வரகு அடை [லோ ஃபேட் வெரைட்டி] போன்ற பலவித அடைகள் உள்ளன. மொத்தத்தில் காலங்காலமாக இருந்துவரும் ஒரு பண்டமானாலும் டாப்பிங்குகள், மினிசைஸ், வெரைட்டி போன்ற அம்சங்களால் நவீன யுகத்திற்கு ஏற்ற உனவுதான் அடை என்பதில் ஐயமில்லை.
அடையைப்பற்றி இன்னும் சில புள்ளி விவரங்கள்:
- தோசை, இட்லி இவைகளை வார்க்கலாம், குத்தலாம் ஆனால் அடையை மட்டுமே தட்டலாம். :-D
- காரடையான் நோன்பு என்று அடையின் முக்கியத்துவத்தை ;-) குறிக்கும் ஒரு சடங்கே உள்ளது. சிற்றுண்டி உலகில் அடைக்கு மட்டுமே இந்த பெருமையுண்டு.
- அடைமொழி, அடை மழை போன்று தனிச்சிறப்பான பிரயோகங்கள் அடைக்கு மட்டுமே உண்டு.
ஆக அடையின் அடக்கத்தால் அடைக்கு அடக்கம் நடந்துவிடாது என்பது நிச்சயம். நவீன யுகத்தில் அடை இன்னும் கவர்ச்சிகரமான விருப்பமாக மாறும்நாள் வெகுதூரத்தில் இல்லை. இதனை மனதில்கொண்டு 2006ஆம் ஆண்டு அடையின் ஆண்டாக அனுசரிப்போம்.
* * * * * * * * * * * *
"டேய் எழுந்திருடா. என்னடா அடைக்கு ஊறப்போட்டுட்டு தூங்கிட்டையா? என்ன கனவுலகத்துல யாரப்பத்தி யோசனை?"
"ஹி..ஹி..எல்லாம் அடையை பத்திதான்!!!"