April 28, 2005

சச்சின்

மாலையானதும் பாண்டவர்களும் கௌரவர்வர்களும் விளையாட கிளம்பினர். ஆச்சாரியர் இன்று ஒரு புது விளையாட்டு சொல்லி தருவதாக அறிவித்திருந்தார். திடலில் சிஷ்யசிகாமனிகள் வட்டமாக அணிவகுத்து நின்றனர். ஆச்சாரியர் கையில் ஒரு தண்டமும் ஒரு வித்தியாச வடிவில் உள்ள மரத்துண்டும் வைத்திருந்தார். குரலை கனைத்துகொண்டு ஆச்சாரியர் முழங்கினார் "குழந்தைகளே! வாருங்கள் ஆடலாம் கில்லி!".

குழந்தைகள் ஆரவாரம் அடங்கி ஆச்சாரியரின் கையை கூர்ந்து கவனித்தனர். ஆச்சாரியர் நெற்றிக்கண் வடிவிலொரு சிறு குழியை தோண்டினார். ஒரு மாணவனை அழைத்து ஒரு நாலு தப்படிகள் தள்ளி நிற்க செய்தார். இருபுறமும் கூர்மையான அந்த மரத்துண்டை குழியின் மீது குறுக்காக வைத்தார். இன்னொரு மாணவனை தண்டத்தால் அதை கெந்த செய்தார். காற்றில் அந்த மரத்துண்டு பறக்க ஆரம்பித்தவுடன் தள்ளி நிற்கும் மாணவனை அதை பிடிக்கும்படி பணித்தார். அவனும் அதை தாவி பிடித்தவுடன் சுற்றிலும் இருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். ஆச்சாரியர் அந்த மரத்துண்டு தான் "கில்லி" என்றார்.

பாண்டவர்களும் கௌரவர்களும் கில்லியின் மீது மோகம் பிடித்து அலைந்தனர். கௌரவர்களில் துச்சாதனன் கில்லி அடிப்பதில் நிகரற்ற திறன் பெற்றிருந்தது எல்லொருக்கும் புரிந்தது. பீமன் ஒவ்வொரு தடவையும் தண்டத்தை உடைப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மற்றவர்கள் சுமாராக ஆடினாலும் ஆட்டம் புதிதாகவும் வித்தியாசமாக இருந்ததனால் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த ஆட்டத்தை மற்ற அரசகுமாரர்களுக்கும் காண்பித்து வியப்பிலாழ்த்த விரும்பினர். ஆட்டதில் இருந்த பரபரப்பில் மாணவர்களுக்குள் அவ்வப்போது சச்சரவுகளும் முளைத்தன. இப்படி ஒரு சமயத்தில் தான் கண்ணன் வரும் செய்தி வந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் துரியோதனன் உனர்ந்தான். பாண்டவர்களை வம்பிழுக்க வாய்ப்பை பயன்படுத்த உத்தேசித்தான். அச்சாரியரிடம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு மத்தியில் கில்லி போட்டி நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தான். ஆச்சாரியரும் சிறுபிள்ளை விளையாட்டு தானே என்று நினைத்து சம்மதித்தார்.

அந்த நாளும் வந்தது. கண்ணனும் காலை ரதத்தில் வந்த களைப்பு தீர இளைப்பாறி கொண்டிருந்தான். பாண்டவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தான். பேச்சுவாக்கில் பீமன் மாலை நடக்க உள்ள போட்டிபற்றி கூறினான். துரியோதனன் அழைத்த போட்டியை அறிந்தவுடன் கண்ணனும் ஏதோ யோசித்தான். மாலையானதும் எல்லொரும் திடலுக்கு கிளம்பினர். கண்ணன் சிறிது தாமதமாக வருவாதக கூறி எங்கோ சென்றான். திடலில் எல்லோரும் வந்தமர்ந்ததும், ஆச்சாரியர் கில்லி ஆட இரு அணிகளையும் அழைத்தார். துரியோதனாதிகள் ஒரு பக்கமும் பஞ்ச பாண்டவர்கள் மறுபக்கமும் குழுமினர். ஆச்சாரியர் கில்லியை கெந்துபவோர் தத்தம் தண்டங்களுடன் வர வேண்டுமென்றார். துரியோதனன் முன்வந்து போட்டியை துவக்கும்முன் தனக்கும் ஒரு சின்ன நிபந்தனை இருப்பதாக அறிவித்தான். என்ன இருந்தாலும் சூட்சமம் இல்லாமல் துரியோதனன் கிடையாதே. பாண்டவர்களில் கில்லியாட்டத்தின் பிரதான தாசனான தருமன், பரபரப்பில் சிந்திக்காமல் நிபந்தனை ஏதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார். இதை திட்டமிட்டு எதிர்பார்த்த துரியோதனன் கூடியிருந்தோர் நன்மைக்காக தன் நிபந்தனையை அறிவித்தான். கட்டை குரலில் கர்ஜித்தான் "இரு அணிக்கும் அணித்தலைவராக ஒருவர் இருக்கவேண்டும். அணித்தலைவர் ஒவ்வொரு முறையும் யார் ஆடவேண்டும் என்று தேர்வு செய்யலாம். தலைவர் தேவைக்கேற்ப யாரை வேண்டுமானாலும் ஆட அழைக்கலாம். எங்கள் அணிக்கு நான் தலைவன், பாண்டவர்களுக்கு தருமன்". யாருக்கும் ஒன்றும் புரியவில்லை சும்மா தலையாட்டினார்கள்.

விநாயகரை பிரார்தித்து துச்சாதனன் தொடங்கினான். கில்லியை பிரமாதமாக கெந்தினான். பாண்டவர்கள் "கோழி பிடிப்பதே மேல்" என்று சிலாகித்தனர். வெகு நேரம் கழித்து அவன் அயர்ச்சியுற்றதால் ஒருவாறாக அவன் ஆட்டம் முடிந்தது. அணிகள் மாறி மாறி மூன்று முறை கெந்துவதாக முடிவு செய்யபட்டிருந்தது. ஆதலால் பாண்டவர்கள் முறை வந்தது. அவர்களில் சிறந்து விளையாடும் நகுலன் முதலில் ஆடினான். ஆனால் அவன் வெகு சீக்கிரத்தில் ஆட்டமிழந்தான். இப்பொழுது தான் துரியோதனன் தன் சதியை அவிழ்த்துவிட்டான். எல்லோரும் ஒரு முறை தான் கெந்தலாம் என்று ஆட்டத்தின் விதி. ஆனால் தான் போட்ட நிபந்தனையின் அடிப்படையில் துச்சாதனனையே மறுமுறை ஆட அழைத்தான். இப்பொழுது புரிந்தது தருமருக்கு தன் மடத்தனம். ஆனால் ஒப்புக்கொண்டாகிவிட்டது இனி எதிர்க்க முடியாது. துச்சாதனன் இந்த தடவை முதன்முறைவிட மேலும் சிறப்பாக ஆடினான். மூன்றாவது முறையும் அவனே ஆடி கௌரவர்களுக்கே வெற்றி என்று கிட்ட தட்ட நிச்சயம் செய்துவிட்டான். அப்பொழுது தான் கண்ணன் அங்கு வந்தான். கூடவே அவர்கள் வயது ஒத்த ஒரு சிறுவனையும் அழைத்து வந்தான். வந்ததும் வராததுமாக தருமன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். தருமன் சிறு புன்சிரிப்புடன் தன் அணிக்காக மூன்றாவது முறையில் அந்த புது சிறுவன் ஆடுவானென்று அறிவித்தான். துரியோதனன் இந்த சிறிது குள்ளமான புதியவன் என்ன செய்துவிடுவான் என்று எகத்தாளமாக புதியவனை ஆட அனுமதித்தான்.

புதியவனிடம் தண்டம் இல்லை. கண்ணன் உடனே அருகே கீழிருந்த மட்டை ஒன்றை எடுத்து குடுத்தார். புதியவன் கெந்த ஆரம்பித்தவுடன் கௌரவர்கள் இங்கும் அங்கும் ஒடினார்களே ஒழிய புதியவனின் ஆட்டத்திற்கு பதில் தெரியாமல் விழித்தார்கள். புதியவன் புயல் போல் ஆடி பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கிக் குடுத்தான். கௌரவர்கள் வாயை பிளந்து பார்த்தனர். துரியோதனன் சற்று சுதாரித்துக்கொண்டு, புதியவனை அணியில் சேர்தது தவறு என்று ஆச்சாரியரிடம் முறையிட்டான். ஆச்சாரியரோ துரியோதனனின் நிபந்தனை படி எல்லாம் சரியே என்று தீர்பளித்தார். வெற்றி கோலாகலத்தின் மத்தியில் தருமன் புதியவனின் பெயரை கேட்டான். புதியவன் "சச்சின், முழு பெயர் சச்சிதாணந்தம்" என்றான். கண்ணன் பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கி குடுத்த அவனுக்கு அடுத்த ஜென்மத்திலும் மட்டை ஆளுவதில் உலக புகழ் அடைய வரமருளினார்.

இது நான் முதன்முதலில் ஆதிமரத்தடியில் எழுதிய கதை. இப்பொழுது படித்துப் பார்த்தேன். அங்கங்கே கரடுமுரடாக இருக்கிறது, சில சின்னங்சிறிய மாற்றங்களுடன் அப்படியே உள்ளிட்டிருக்கிறேன். யாரும் நான் வெரும் நுட்பவியலாளன் என்று மட்டும் நினைத்துவிடக்கூடாதே! நாளை நான் ஒரு மாத விடுப்பில் சென்னை செல்கிறேன். அநேகமாக அடுத்த பதிவு சென்னையிலிருந்து!

April 27, 2005

Firefox'ல் என்ன பிரச்சினை?

சமீபத்தில் மதி மற்றும் காசி தத்தம் பதிவுகளில் ஃபயர்ஃபாக்ஸில் ஒழுங்கமைத்த (justified) தமிழ் ஒருங்குறி எழுத்துக்கள் சரியாக தோன்றாமை பற்றி எழுதியுள்ளனர்.
இதற்கு voice on wings (தமிழில் பெயர் வெச்சுக்க கூடாதா?) ஒரு தற்காலிக நிவாரணம் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை தமிழுக்கு மட்டுமில்லை ஏனைய இந்திய மொழிகள், தாய், பர்மீஸ், அரபி, ஹீப்ரு போன்ற மொழிகளுக்கும் உண்டு. இந்த மொழிகளை சரியாக காண்பிக்க Complex Text Layout rendering engine தேவைப்படுகிறது. பொதுவாக விண்டோஸில் வரும் மென்பொருட்கள் MS'ன் Uniscribe dll'ஐ பயன்படுத்தி இம்மொழிகளை காண்பிக்கலாம். லினக்ஸில் இதே வேலைக்கு pango பயன்படுத்துகின்றனர். இவை தவிர ICU மற்றும் SIL Graphite'ம் களத்தில் உள்ளனர். (நன்றி voice on wings). மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸில் லினக்ஸ் வெளியீடில் pango பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக மற்ற இந்திய மொழிகளை காட்டிலும் மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸில் தமிழுக்குதான் font support நிறைய. அதனால் தற்போது தமிழ் எழுத்துருவிற்காக custom rendering code தான் உபயோகிக்கிறார்கள். Uniscribe கொண்டு தமிழ் பாவிக்க முடியுமா என்று தெரியவில்லை. இதைப்பற்றி எழுத்துரு பெரும்புள்ளி Jungshik Shinக்கு அஞ்சல் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும்பொழுது விடையளிப்பார் என நம்புவோம்.

தற்போதைய நிலவரம்:

  • இந்த ஒழுங்கமை (justify) பிரச்சினை எல்லா CTL மொழிகளிலும் உண்டு
  • Uniscribe, Pango support இன்னும் முழுமையாக இல்லை
  • நமக்கு இந்த பிரச்சினை சிறிய ஆனால் பரவலான பிரச்சினைதான். இது மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸில் உள்ள அடிப்படை குறையாகும்
என்ன செய்யலாம்?
  • Voice on wings கூறியதுதான் சாலச் சிறந்த வழி
  • C/C++ நல்ல தேர்ச்சியுடயவர்கள் மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸின் மூலத்தில் கை வைக்கவேண்டும், இது மண்டைகாயும் விவகாரம் போல் தெரிகிறது. யாராவது விஷயம் தெரிந்தவர்கள் தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும். இதுபற்றி தமிழ்லினக்ஸில் போனவருடம் விவாதம் நடந்தது. மேற்கொண்டு ஏதும் நடந்ததாக தெரியவில்லை. இது சம்பந்தமாக வசீகரனுக்கும் அஞ்சல் செய்துள்ளேன்.
  • தமிழ் வலைஞர்கள் தங்கள் ஆக்கங்களில் ஒழுங்கமைக்கும் வசதியை (text-justify) பயன்படுத்துவதை தவிர்க்கலாம்
  • மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸின் தமிழ் பொதியில் voice on wings சொன்ன userContent.css'ஐ முன்னதாகவே நிறுவி வினியோகிக்கலாம்.

April 21, 2005

ராமானுஜன் பரிசு

நொபெல் பரிசு இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய ஐந்து துறைகளில் தான் முதலில் வழங்கப்பட்டது. ஆல்ஃப்ரட் நொபெல் (ஆல்தோட்ட பூபதி இல்லை :-) ) தன் 1985'ல் உயிலில் தனக்கு பிடித்த நான்கு அறிவியல் பிரிவுகள் மற்றும் மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளில் பெரும் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்க எழுதிவைத்தார். நொபெல் பரிசு வாங்கியே மில்லியனெர் ஆகிவிடலாமாம், அவ்வளவு தருகிறார்களாம். (முயன்று பார்க்கலாமோ? ஒன்னேகால் மில்லியன் டாலர் என்றால் சும்மாவா?)
அப்புறம் 1965'ல் பொருளியலில் நொபெல் வழங்க ஆரம்பித்தார்கள் (இது அசல் நொபெல் இல்லை). இப்பொழுது 2001'ல் அறிவியல் பிரிவுகளில் ரானியம்மா, கணிதத்திற்கு நொபெல் போல் ஏபெல் பரிசு வழங்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த கணித நொபெல், அதாங்க ஏபெல் பரிசு குழுவினர் அப்துஸ் சல்மான் சர்வதேச துனிபு இயற்பியல் மையம் மற்றும் சர்வதேச கணித இணையம், இந்த வருஷம் ராமானுஜன் பரிசு என்றொரு பரிசு நிறுவியிருக்கிறார்கள். வளர்ந்து வரும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சாதனைபுரிந்த இளம் கணிதவியலாளருக்கு இது வழங்கப்படும். அம்மாடியோவ்!...
இனி கணிதமேதை ராமானுஜனுக்கு அங்கீகாரம் கிடைக்குமா/கிடைத்ததா என்ற கேள்விகள் எல்லாம் புறந்தள்ளுங்கள். இன்று ராமானுஜனின் பெயரால் மற்றவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

April 18, 2005

தமிழ் கணினிமயமாக்கல்: சுட்டிகளால் ஓர் அறிமுகம்

இந்த பதிவில் நான் தமிழ் கணினிமயமாக்கல் முயற்சிகளை (தகமு) அட்டவனை படுத்த எத்தனித்துள்ளேன். தகமு அனைத்தையும் குறிப்பிடுவது என்பது இயலாத காரியம். இது என் சக்திக்கும் அறிவுக்கும் அப்பார்பட்டது. பயனர்களுக்கு முக்கியமான, பரவலாக மற்றும் நேரடியாக பயன்படக்கூடிய மென்பொருள் சார்ந்த முயற்சிகளை மட்டுமே தொடுத்துள்ளேன்.
"வெல்லத் தமிழ் இனி மெல்ல சாகும், கணினித் தமிழே இனி வாழும்"

என்பது எல்லோரும் அறிந்ததே. :-D. திடீரென்று தமிழ் புத்தாண்டிற்கு இந்திய அரசு சில தமிழ் மென்பொருள்களை பொட்டலம் கட்டி ஒரு வட்டு வெளியிட்டிருக்கிறது. தமிழில் அவ்வளவு மென்பொருட்கள் வந்துவிட்டனவா? எப்படி, யார் உருவாக்கினார்கள் இவைகளை? தன்னலமில்லா பல மனிதர்களின் உழைப்பு இதில் இருக்கிறது.


எல்லா நல்ல காரியங்களையும் போல் தமிழை கணினிமயமாக்க
  • தன்னார்வலர்கள் தான் நிறை(ர)ய செய்கிறார்கள்
  • இவர்களையும் இவர்கள் பங்களிப்பையும் ஒரு சிறு வட்டத்திற்கு வெளியே தெரியாது
  • சந்தையில் வரவேற்பு மந்தம்தான்
  • பெரும்பாலும் அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
சரி விஷயத்துக்கு வருகிறேன். தமிழ் கணினிமயமாக்கல் முயற்சிகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று திறமூல வகை மற்றது மீதி வகையெல்லாம்.

திறமூல முயற்சிகள்

அ. லினக்ஸ்
கணினியின் பிரதானமான மென்பொருள் 'இயங்குதளம்' ஆகும். பரவலான லினக்ஸ் பொதிகள் தற்போது தமிழில் கிடைக்கிறது. வெங்கட் நிர்வகிக்கும் தமிழ் லினக்ஸ் புதிய வலைமனையில் (இன்னும் கட்டுமானத்தில் உள்ளது) மேலும் தகவல்கள் காணலாம். பழையது இங்கே. இதையும் படிக்கலாம். தமிழ் லினக்ஸ் - சில பொதிகள்
ஆ. ஓபன் ஆஃபீஸ்
தமிழில் ஓபன் ஆஃபீஸ் முதலில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தது இந்திய அரசின் பாரதீய குழுவே. அடுத்து முகுந்தராஜ் ஒருங்கினைக்க முனைந்தார். பிற்பாடு 'ழ' கணினி குழு சேர்ந்துகொண்டது.
இ. க்னோம்/ கே.டி.ஈ
இது லினக்ஸ் சம்பந்தப்பட்டது. லினக்ஸ் இயந்குதளத்தின் கெர்னல் (மூலவர்) மற்றும் பயனருக்கும் இனைப்பாக இருக்கும் மென்பொருள்.
ஈ. மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸ்
தமிழில் மொசில்லா/ஃப்யர்ஃபாக்ஸ் முற்றிலுமாக மொழியாக்கம் செய்தது முகுந்தராஜ்/இளஞ்செழியனின் தமிழா குழுவினர்.
உ. இதர விஷயங்கள்
இதை தவிர நியூக்லியஸ், டக்ஸ் பெயிண்ட் போன்ற மென்பொருட்களும் தமிழில் கிடைக்கின்றது. இவற்றுக்கான சுட்டிகள் பின்னர் தருகிறேன்.

மற்ற முயற்சிகள்

அ. எழுத்துருக்கள்
தமிழ் எழுத்துருக்களில் சின்னதுரை ஸ்ரீவாஸ் மற்றும் உமர் தம்பி அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிட வேண்டியது.
ஆ. மென் விசைப்பலகைகள்/IME
இது வேற ஒன்னுமில்லை, எந்த ஒரு விசைப்பலகையை கொண்டும் தமிழில் தட்டச்ச பயன்படுத்தும் மென்பொருட்கள்தான் இவை. எ-கலப்பை, முரசு போன்றவை.
இ. மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் இந்திய மொழிகளில் தன் ஆஃபீஸ் பொதிகள் பயன்படுத்துவதற்காக பாஷா என்றொரு தன்னார்வலர்கள் (இங்கேயா?) மூலம் இயங்கும் திட்டம் கொண்டுவந்தது. தமிழ் பகுதியை மாலன் ஒருங்கினைத்தார்.
ஈ. இதர விஷயங்கள்
மேலே சொன்ன முயற்சிகள் தவிர மதுரை திட்டம், கலோன் பல்கலைகழகத்தின் நிகண்டு, முரசு, பொன்விழி போன்ற சிறப்பான முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் விபரங்கள் உத்தமத்தின் இந்த வலை பக்கத்தில்.

சில முக்கியமான தமிழ் கணினிமயமாக்கல் முயற்சிகளை பற்றி சுட்டிகள் கொடுத்துள்ளேன். புதுசா யாராவது கணினியில் தமிழ்மயமாக்கும் முயற்சிகள் பற்றி தெரிஞ்சுக்க நினைச்சா உபயோகமா இருக்கும்னு நினைக்கறேன். தெரிஞ்சுண்டு அப்படியே அவரவர் நேரம் மற்றும் சக்திக்கு தகுந்தார்போல் இந்த முயற்சிகளுக்கு உதவி செய்தால் போற வழிக்கு புன்னியம் கிடைக்கும், இல்லையா? என்ன நான் சொல்றது?

April 13, 2005

கணினித் தமிழ் அகராதிகள்

இராதாகிருஷ்ணனின் வலைப்பதிவில் இனையத்தில் தமிழ் அகராதியை ஏற்றும் சிகாகோ பல்கலைகழகத்தின் முயற்சியை பற்றி பார்த்தேன். ஏற்கனவே ஜெர்மனியின் கலோன் பல்கலைகழகத்தின் தமிழ் நிகண்டு (lexicon) வலையில் உள்ளது. இதை இன்னும் எளிமையாக பயன்படுத்த விரிஜீனியா பல்கலைகழகத்தின் அண்புமனி தமிழ் இடைமுகம் உருவாக்கியுள்ளார்.
இந்திய மொழிகளில் தமிழ்தான் இனையத்தில் வெகுவாக பரந்து விரிந்து வளர்ந்து வருகிறது. கணினிக்காக தமிழ் சொல்திருத்திகள் சில சந்தைகளில் கிடைக்கின்றன. இவைகளை பற்றி பரிச்சயமில்லை. ஆனால் திறவூற்று முயற்சிகள் சிலதும் நடந்துவருகின்றன, நன்றி: தமிழா குழு. மைக்ரோசாப்டும் பாஷா திட்டத்தை நிறுவியுள்ளது. ஆனால் இந்த தமிழ் திறவூற்று முயற்சிகள் வெகு முன்னமே நிறைவடைந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தன. தமிழக அரசின் ஆதரவைப்பெற்ற 'ழ' திட்டம் மற்றும் அதன் நிர்வாகிகள் (எழுத்தாளர் சுஜாதா உள்பட) கொஞ்சம் நிதானமாக சமயோசிதமாக மற்றும் தீர்க்கமாக செயல்பட்டிருந்தால் இந்நேரம் கணினித் தமிழுக்கு பொன்னேரமாக அமைந்திருக்கும். இந்த 'ழ' சர்ச்சை மற்றும் தமிழ் திறவூற்று முயற்சிகள் பற்றி வேறொரு நாள் எழுதவேண்டும்.

என் ஜன்னலுக்கு வெளியே

ஒரு ஒன்னரை வாரம் முன்னாடி அவர்கள் வந்தார்கள். ஒருவர் கொஞ்சம் சாதாரனமாகவும் மற்றவர் நல்ல பருமனாகவும் இருந்தார். முதலில் இடமெல்லாம் வசதியா இருக்கா என்று நோட்டம் விட்டார்கள். தொட்டுப் பார்த்தனர், தட்டிப் பார்த்தனர், உரசிப் பார்த்தனர். பின் மறைந்துவிட்டனர்.
ஒரு அரை மணி நேரம் கழித்து 'நங்' என்று சத்தம் வந்தது. அவர்கள் என் ஜன்னலின் வெளித்தட்டில் முதல் (கல்) குச்சியை நட்டனர், சரி சரி, வைத்தனர்.

அன்றிலிருந்து அரை மணி ஒரு மணிக்கு ஒரு தரம் ஒரு 'குருகுக்கூஉ உ ' அல்லது ஒரு 'உஉஉயூஊ..' தான். இப்பொ நல்ல காற்றோட்டமா, சொகுசா செட்டில் ஆயாச்சு.

நேற்று பார்த்தேன், இரண்டு ரோஸ் நிற முட்டைகள் தயார். அப்ப அப்ப திரும்பி வாகு மாற்றிக்கொண்டு மறுபடியும் ஒரு 'குருகுக்கூஉ உ '. நல்ல வெயில் காய்கிறது. முதல் மாடியில் வாசம். நேரம் கிடைச்சா அப்படியே எட்டி நம்ம கணினித் திரையில் லேட்டஸ்ட் நியூஸ் மேலோட்டம் விடுவார். நான் கேட்கும் இசை பிடிச்சா நம்ம பக்கம் பார்கிறார் பிடிக்கலைன்னா அப்படியே கழுத்தை மட்டும் திருப்பிக் கொள்கிறார். ரொம்ப ஸ்டிரிக்டு.

வேற வேலையே ஓடறதில்லை. எப்பொ குஞ்சு பொரியுமோ தெரியலை. புத்தாண்டு ரிலீசுக்காக வெய்ட்டிங்!

April 08, 2005

வந்தனம்


இது என் முதல் பதிவு.
அது என்ன பேரு 'யக்ஞா'? என் முழு பெயர் யக்ஞநாராயணன். இதை இப்படி உச்சரிக்கலாம்.
இப்போ என்ன பன்ற? இப்போதைக்கு Purdue [பர்டூ] பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். எப்போ படிப்பு முடியும்? தேவனுக்கே தெலிசு.
எதுக்கு இந்த வலைப்பதிவு? வேற வேலை இல்லையா? இத்தனை நாள் பொருத்து பார்த்தேன், முடியலை. சும்மா அப்படி தமிழ்ல கிறுக்கினா ஒரு பழக்கமாகுமேனு.
தொலைஞ்சுபோ, சரி என்ன எழுதபோற? அதான் தலைப்புல இருக்குதே. அப்ப அப்ப எனக்கு தோனறதை (மாசம் ஒரு வாட்டி?) எழுதுவேன்.
வேற எதனாச்சும்? கொஞ்சம் டமில் பிரச்சினை இருந்தா திட்டிக்காட்டறதை விட சுட்டிக்காட்டினா சௌகரியம்.