மாலையானதும் பாண்டவர்களும் கௌரவர்வர்களும் விளையாட கிளம்பினர். ஆச்சாரியர் இன்று ஒரு புது விளையாட்டு சொல்லி தருவதாக அறிவித்திருந்தார். திடலில் சிஷ்யசிகாமனிகள் வட்டமாக அணிவகுத்து நின்றனர். ஆச்சாரியர் கையில் ஒரு தண்டமும் ஒரு வித்தியாச வடிவில் உள்ள மரத்துண்டும் வைத்திருந்தார். குரலை கனைத்துகொண்டு ஆச்சாரியர் முழங்கினார் "குழந்தைகளே! வாருங்கள் ஆடலாம் கில்லி!".
குழந்தைகள் ஆரவாரம் அடங்கி ஆச்சாரியரின் கையை கூர்ந்து கவனித்தனர். ஆச்சாரியர் நெற்றிக்கண் வடிவிலொரு சிறு குழியை தோண்டினார். ஒரு மாணவனை அழைத்து ஒரு நாலு தப்படிகள் தள்ளி நிற்க செய்தார். இருபுறமும் கூர்மையான அந்த மரத்துண்டை குழியின் மீது குறுக்காக வைத்தார். இன்னொரு மாணவனை தண்டத்தால் அதை கெந்த செய்தார். காற்றில் அந்த மரத்துண்டு பறக்க ஆரம்பித்தவுடன் தள்ளி நிற்கும் மாணவனை அதை பிடிக்கும்படி பணித்தார். அவனும் அதை தாவி பிடித்தவுடன் சுற்றிலும் இருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். ஆச்சாரியர் அந்த மரத்துண்டு தான் "கில்லி" என்றார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் கில்லியின் மீது மோகம் பிடித்து அலைந்தனர். கௌரவர்களில் துச்சாதனன் கில்லி அடிப்பதில் நிகரற்ற திறன் பெற்றிருந்தது எல்லொருக்கும் புரிந்தது. பீமன் ஒவ்வொரு தடவையும் தண்டத்தை உடைப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மற்றவர்கள் சுமாராக ஆடினாலும் ஆட்டம் புதிதாகவும் வித்தியாசமாக இருந்ததனால் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த ஆட்டத்தை மற்ற அரசகுமாரர்களுக்கும் காண்பித்து வியப்பிலாழ்த்த விரும்பினர். ஆட்டதில் இருந்த பரபரப்பில் மாணவர்களுக்குள் அவ்வப்போது சச்சரவுகளும் முளைத்தன. இப்படி ஒரு சமயத்தில் தான் கண்ணன் வரும் செய்தி வந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் துரியோதனன் உனர்ந்தான். பாண்டவர்களை வம்பிழுக்க வாய்ப்பை பயன்படுத்த உத்தேசித்தான். அச்சாரியரிடம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு மத்தியில் கில்லி போட்டி நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தான். ஆச்சாரியரும் சிறுபிள்ளை விளையாட்டு தானே என்று நினைத்து சம்மதித்தார்.
அந்த நாளும் வந்தது. கண்ணனும் காலை ரதத்தில் வந்த களைப்பு தீர இளைப்பாறி கொண்டிருந்தான். பாண்டவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தான். பேச்சுவாக்கில் பீமன் மாலை நடக்க உள்ள போட்டிபற்றி கூறினான். துரியோதனன் அழைத்த போட்டியை அறிந்தவுடன் கண்ணனும் ஏதோ யோசித்தான். மாலையானதும் எல்லொரும் திடலுக்கு கிளம்பினர். கண்ணன் சிறிது தாமதமாக வருவாதக கூறி எங்கோ சென்றான். திடலில் எல்லோரும் வந்தமர்ந்ததும், ஆச்சாரியர் கில்லி ஆட இரு அணிகளையும் அழைத்தார். துரியோதனாதிகள் ஒரு பக்கமும் பஞ்ச பாண்டவர்கள் மறுபக்கமும் குழுமினர். ஆச்சாரியர் கில்லியை கெந்துபவோர் தத்தம் தண்டங்களுடன் வர வேண்டுமென்றார். துரியோதனன் முன்வந்து போட்டியை துவக்கும்முன் தனக்கும் ஒரு சின்ன நிபந்தனை இருப்பதாக அறிவித்தான். என்ன இருந்தாலும் சூட்சமம் இல்லாமல் துரியோதனன் கிடையாதே. பாண்டவர்களில் கில்லியாட்டத்தின் பிரதான தாசனான தருமன், பரபரப்பில் சிந்திக்காமல் நிபந்தனை ஏதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார். இதை திட்டமிட்டு எதிர்பார்த்த துரியோதனன் கூடியிருந்தோர் நன்மைக்காக தன் நிபந்தனையை அறிவித்தான். கட்டை குரலில் கர்ஜித்தான் "இரு அணிக்கும் அணித்தலைவராக ஒருவர் இருக்கவேண்டும். அணித்தலைவர் ஒவ்வொரு முறையும் யார் ஆடவேண்டும் என்று தேர்வு செய்யலாம். தலைவர் தேவைக்கேற்ப யாரை வேண்டுமானாலும் ஆட அழைக்கலாம். எங்கள் அணிக்கு நான் தலைவன், பாண்டவர்களுக்கு தருமன்". யாருக்கும் ஒன்றும் புரியவில்லை சும்மா தலையாட்டினார்கள்.
விநாயகரை பிரார்தித்து துச்சாதனன் தொடங்கினான். கில்லியை பிரமாதமாக கெந்தினான். பாண்டவர்கள் "கோழி பிடிப்பதே மேல்" என்று சிலாகித்தனர். வெகு நேரம் கழித்து அவன் அயர்ச்சியுற்றதால் ஒருவாறாக அவன் ஆட்டம் முடிந்தது. அணிகள் மாறி மாறி மூன்று முறை கெந்துவதாக முடிவு செய்யபட்டிருந்தது. ஆதலால் பாண்டவர்கள் முறை வந்தது. அவர்களில் சிறந்து விளையாடும் நகுலன் முதலில் ஆடினான். ஆனால் அவன் வெகு சீக்கிரத்தில் ஆட்டமிழந்தான். இப்பொழுது தான் துரியோதனன் தன் சதியை அவிழ்த்துவிட்டான். எல்லோரும் ஒரு முறை தான் கெந்தலாம் என்று ஆட்டத்தின் விதி. ஆனால் தான் போட்ட நிபந்தனையின் அடிப்படையில் துச்சாதனனையே மறுமுறை ஆட அழைத்தான். இப்பொழுது புரிந்தது தருமருக்கு தன் மடத்தனம். ஆனால் ஒப்புக்கொண்டாகிவிட்டது இனி எதிர்க்க முடியாது. துச்சாதனன் இந்த தடவை முதன்முறைவிட மேலும் சிறப்பாக ஆடினான். மூன்றாவது முறையும் அவனே ஆடி கௌரவர்களுக்கே வெற்றி என்று கிட்ட தட்ட நிச்சயம் செய்துவிட்டான். அப்பொழுது தான் கண்ணன் அங்கு வந்தான். கூடவே அவர்கள் வயது ஒத்த ஒரு சிறுவனையும் அழைத்து வந்தான். வந்ததும் வராததுமாக தருமன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். தருமன் சிறு புன்சிரிப்புடன் தன் அணிக்காக மூன்றாவது முறையில் அந்த புது சிறுவன் ஆடுவானென்று அறிவித்தான். துரியோதனன் இந்த சிறிது குள்ளமான புதியவன் என்ன செய்துவிடுவான் என்று எகத்தாளமாக புதியவனை ஆட அனுமதித்தான்.
புதியவனிடம் தண்டம் இல்லை. கண்ணன் உடனே அருகே கீழிருந்த மட்டை ஒன்றை எடுத்து குடுத்தார். புதியவன் கெந்த ஆரம்பித்தவுடன் கௌரவர்கள் இங்கும் அங்கும் ஒடினார்களே ஒழிய புதியவனின் ஆட்டத்திற்கு பதில் தெரியாமல் விழித்தார்கள். புதியவன் புயல் போல் ஆடி பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கிக் குடுத்தான். கௌரவர்கள் வாயை பிளந்து பார்த்தனர். துரியோதனன் சற்று சுதாரித்துக்கொண்டு, புதியவனை அணியில் சேர்தது தவறு என்று ஆச்சாரியரிடம் முறையிட்டான். ஆச்சாரியரோ துரியோதனனின் நிபந்தனை படி எல்லாம் சரியே என்று தீர்பளித்தார். வெற்றி கோலாகலத்தின் மத்தியில் தருமன் புதியவனின் பெயரை கேட்டான். புதியவன் "சச்சின், முழு பெயர் சச்சிதாணந்தம்" என்றான். கண்ணன் பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கி குடுத்த அவனுக்கு அடுத்த ஜென்மத்திலும் மட்டை ஆளுவதில் உலக புகழ் அடைய வரமருளினார்.
இது நான் முதன்முதலில் ஆதிமரத்தடியில் எழுதிய கதை. இப்பொழுது படித்துப் பார்த்தேன். அங்கங்கே கரடுமுரடாக இருக்கிறது, சில சின்னங்சிறிய மாற்றங்களுடன் அப்படியே உள்ளிட்டிருக்கிறேன். யாரும் நான் வெரும் நுட்பவியலாளன் என்று மட்டும் நினைத்துவிடக்கூடாதே! நாளை நான் ஒரு மாத விடுப்பில் சென்னை செல்கிறேன். அநேகமாக அடுத்த பதிவு சென்னையிலிருந்து!
No comments:
Post a Comment