September 13, 2006

இந்தியா - டயாபிடீஸே வருக! : நியூ யார்க் டைம்ஸ் தலைப்புச் செய்தி

இன்று நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் சென்னையிலிருந்து வந்திருக்கு. இந்தியாவின் வளர்ச்சியால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தாலும் டைப் 2 டயாபிடீஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்த கட்டுரை தெரிவிக்கிறது. எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கிட்டு நல்லா போர்வை இழுத்து போத்திக்கிட்டு தூங்குங்க, டயாபிடீஸ் வருதாம்ல.

July 17, 2006

புரான கால திரைப்படங்கள்

முந்தி மரத்தடியில் இட்டது. இப்போது இம்சை அரசன் வந்திருக்கிறது. ஆதலால் இந்த மீள்பார்வை . இனி அரகோனும் சீயானும்...

அரகோனும் சீயானும்

"Lord of the rings- the return of the king " (லாடர்) ஒரு வெறியுடன் முதல் வாரமே கொட்டகையில் போய் பார்த்த படம். இந்த படவரிசை அப்படி என்னை சுண்டியிழுத்தது. லாடர் முதல் தவணை[Fellowship of the ring] படம் வந்த பொழுது இது எதோ கிருத்துவ படமோ என்று நினைத்து டிவிடியில் பார்க்கலாம் என்று ஒதுங்கிவிட்டேன். ஆனால் படம் சக்கைபோடு போட்டபின் டிவிடி வெளியாகும் வரை காத்திருக்க இயலாமல் பதிவிறக்கம் [கண்டுகாதீங்க..] செய்து பார்த்தேன். அப்பொழுதே அடிமையாகிவிட்டேன் அதற்கு. அரகோனை முதலில் பார்த்தவுடன் எதோ மனதில் தோன்றியது ஆனால் பிடிபடவில்லை. இரண்டாம் தவனை பார்த்தபொழுதுதான் பொறி சிக்கியது. அட இது சீயான் மாதிரியே இருக்கு. கிட்டதட்ட ஒரே உயரம், முகவெட்டு, தாடை இன்னபிற எல்லாம் விக்ரம் போலவே இருந்தது.

லாடர் ஒரு புராணக்கதை, மிக பிரம்மாண்டமான, உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் ரம்மியமான காட்சிகளால் வடிக்கப் பட்டுள்ளது. தோள்வரை ஜடாமுடியுடன் அரகோன் மிக இயல்பாக இருப்பார். நம்ம ஊர் இதிகாசங்களைப் படமாக்கினால் ஜடாமுடி பின்கழுத்துவரைக்கும் ஒரு பெரிய பங்க் போலதான் இருக்கும். பாதி நேரம் டோபா என்று எழுதி ஒட்டியிருக்கும், செயற்கையாக இருக்கும். இதே பொதிகையில் சில வருடங்களுக்கு முன்னால் கலைஞரின் 'வாளுக்கு வேலி' தொடரில் [தேவதையில் கூட] நாசர் பாதி முதுகு வரை ஜடாமுடியுடன் திரிவார். இது மிக இயல்பாக இருக்கும். இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் தமிழ்திரையின் சில குணாதிசயங்கள் புலப்படும். கோடம்பாக்கதில், நமது இதிகாசங்களைப் படமாக்கிய முயற்சிகள் எல்லாவற்றிலும் (கிட்டதட்ட) ஆதாரமாக கீழ்கண்ட விஷயங்களை கவனிக்கலாம்,

1. பிரம்மாண்டமான செட்டுகள்
2. வழக்கத்திற்கு அதிகமான பாடல்கள்
3. [மிக?] தோராயமான வரலாற்றுக் குறிப்புகள்
4. காதலே பிரதானமான கதையம்சங்கள்

காலப்போக்கில் பார்த்தோமானால், தமிழ் திரைப்படங்கள் தேசீயம் மற்றும் புராணக் கதைகளில் ஆரம்பித்து, சமகாலச் சித்திரங்கள் பின்பு காதல் தழைத்தோங்கி, இப்பொழுது அதன் பிடியில் இருந்து மீளமுடியாமல் சிக்கிவிட்டது. கிட்டதட்ட அறுபதுகளுக்கு பிறகு சரித்திரப் படங்கள் ஏனோ ஒதுக்கப்பட்டுவிட்டன. கடந்த முப்பது வருடங்களில் நடுநடுவே தோன்றும் ராமநாராயணன் வகை அபத்தங்களைப் புறந்தள்ளினால் சரித்திரம் மற்றும் புராணங்கள் சார்ந்த கருக்கள் கொண்ட படங்கள் மிக மிகச் சொற்பம் [சுத்தமாக பூஜ்யமோ?].

சரித்திரப் படங்கள் (இதிகாச மற்றும் மன்னராட்சி காலக் கதைகள்) எடுப்பதில் அப்படி என்னதான் கஷ்டம்? இதிகாச மற்றும் சங்ககாலக் கதைகள் மக்களுக்கு அத்துபடி. அவற்றை திரைக்கதையாக்கும் பொழுது கற்பனைக்கு இடம் மிகக்குறைவு(அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்). துல்லியமாக சரித்திரக் குறிப்புகளை, பிண்ணனியை ஆதாரமாக வைத்து அதே சமயம் ரசனையாகவும் திரைக்கதை எழுதுவதெல்லாம் நம்மவர்களுக்கு ஒலிம்பிக்சில் பதக்கம் வாங்குவதைக் காட்டிலும் சிரமம். வளமான அக்கதைகளைத் திரைக்கதையாக்க நல்ல தேர்ச்சி வேண்டும். உதாரணத்திற்கு, கதாநாயகன் நல்லவன், வல்லவன், ஏழை என்பதைச் சித்தரிக்க வேண்டும். இதனை கோடம்பாக்க சிற்பிகள் எடுத்தால் முதல் காட்சியில் கதாநாயகன் ஒரு பிச்சைக்காரனுக்கு பத்து பைசா போட்டுவிட்டு முடிந்தால் ஒரு பாட்டு பாடிவிட்டு வருவார். அடுத்து ஒரு சண்டைக்காட்சி வைத்து, அதில் ஒரு பத்துபேரை பறந்து பறந்து பந்தாடுவார். முடித்தவுடனே பரிட்சைக்குக் காசுகட்ட அல்லது அம்மாவின் [அல்லது உங்களுக்கு பிடித்த நெருங்கிய உறவைப் போட்டுகலாம்] சிகிச்சைக்குப் பணமில்லாமல் திண்டாடுவார். அவ்வளவுதான் இதை ஞாபகம் வெச்சுக்கவேண்டியது படம்பார்க்க வந்தவர்களுடய பொறுப்பு, ஏனென்றால் அதன்பிறகு கதாநாயகன் நல்ல ஷூ, விலையுயர்ந்த பைக் சகிதம் வலம்வருவார், கதாநாயகியை துரத்துவார். இப்படித் திரைக்கதை எழுதிப் பழகியவர்களுக்கு சரித்திரக் கதைகள் எல்லாம் ஓவர்லோடு.

நமது இதிகாசங்களில் நொடிப்பொழுதில் உருமாறுவது, அப்படியே ஒரு நூறு அடி எழும்பிப் பறந்துபோவது, அஸ்திர-சஸ்திரங்களைக் குறைந்தது ஐம்பது அடி ஏவி பைரோடெக்நிக்சுடன் சண்டை போடுவது, பிரம்மாண்டமான அரக்கர்கள் முதல் பூமிக்கடியில் பாதாளலோகம் வரை பல சைஸ்கள் பல காஸ்ட்யூம்கள் பல லொகேஷன்கள் எல்லாம் சகஜம். இவையெல்லாம் நம்பும்படியாக திரையில் காட்ட மிகுந்த பொருட்செலவும் அதைவிட முக்கியமாக தொழில்நுட்பமும் தேவை. தவிர நம்மூரில் கொஞ்சம் மார்க்கெடிங் திறமையும் குறைவு. திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு முப்பது ரூபாய் கொடுத்துப் படம் பார்த்துவிட்டுப் போகும் வாடிக்கையாளாராக ரசிகர்களைப் பார்த்துவந்ததினால் மார்க்கெட் விருத்தியாகமலே இருந்துவிட்டது. இதனால் தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்தாலும் ஓரளவுக்குமேல் பணம் ஈட்டமுடியாது. இதையெல்லாம்விட சுவாரசியமான காரணம் ஸ்டார் கலாச்சாரம், ஹீரோக்களும் அவர்கள் இமேஜும்.

உலகமயமாக்கல், மென்பொருள்துறையில் தொடங்கி இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்ப கலாசார முன்னேற்றம், இளைஞர்களின் வரவு, ஓங்கியுள்ள பணப்புழக்கம் இவையெல்லாம் இன்று சூழ்நிலைகளை மாற்றிவருகின்றன. சமீபத்தில் ஒரு ஜப்பானிய நிறுவனம் ராமாயணத்தை சித்திரப் படமாக பிரமாதமாக எடுத்துள்ளது. Universal, Sony Columbia, 20th Century போன்ற பெரிய பட நிறுவனங்கள் எல்லாம் தற்பொழுது இந்தியாவைப் பெரும் சந்தையாகப் பார்க்க தொடங்கியுள்ளன. ஸ்பெஷல் எ·பெக்டுகள், சித்திர படம் எடுப்பது எல்லாம் இப்பொழுது மென்பொருள் சார்ந்த சமாச்சாரமாகிவிட்டது. Pentasoft, VCL (Tata Elxsi), Toonz animation ஆகிய முன்னனி நிறுவனங்கள் இதில் அதிவேகமாக முன்னேறி வருகின்றன. Time-freeze, motion capture போன்ற யுக்திகள் பாடல்களில் வருகின்றன. கதைக்கு உபயோகமாகப் பயன்படுத்தினால் கற்பனை உலகின் எல்லையை மேலும் விஸ்தரிக்கலாம்.

வங்கிகளின் முதலீடு மற்றும் பெருகிய பணப்புழக்கம், NRI மார்கெட் இவையெல்லாம் திரைப்படங்களின் பட்ஜெட்டை விண்ணை நோக்கி உயர்த்தி வருகின்றன. மணிரத்னம், ஷங்கர்களின் வெற்றி புதிய தலைமுறையை தொழில்நுட்பத்துடன் நட்புடன் பழகவைத்துள்ளது. NSD, Film institute மற்றும் வெளிநாடுகளில் படித்துவிட்டு சினிமா எடுக்கவரும் இளைஞர்களின் வரவு அதிகரித்து வருகிறது. சினிமா வெரும் வியாபாரம் மட்டுமில்லை ஒரு கலைவடிவமமும் கூட. நமது ஞாபகக் கிடங்களில் புஸ்தகங்களில் தூங்கிவரும் வளமையான நமது பாரம்பரியத்தின் அடையாளங்கள் நவீன கலை ஊடகமான சினிமாவிலும் தடம்பதிக்க இயலாமல் தவிர்க்கும் தடைகள் உடைந்துவருகின்றன.

இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானது கதைதான். கணக்கு வழக்கே இல்லாமல் அபரிமிதமான அம்சங்களுடன் உன்னதமான கருத்துகளுடன் நிரம்பிய நம் பாரம்பரிய இதிகாசங்கள் திரைப் படைப்பாளிகளுக்கு ஒரு வரம். லாடர், பதுங்கும் புலி பாயும் சிறுத்தை போன்ற படங்களின் வெற்றி மற்றும் சின்னத்திரையில் சரித்திரத் தொடர்களுக்கு மக்களின் வரவேற்பு இவர்களின் கண்களைத் திறக்கட்டும். சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் கதையைத் திரைக்குக் கொண்டுவருவதில் உள்ள சிரமத்தை விவரிக்கும்பொழுது கமலஹாசன், "இரண்டரை மணிக்குள்ளான திரைக்கதையில் இந்தக் கதையை அடைப்பது கஷ்டம்" என்று குறிப்பிட்டார். எதற்காக இரண்டரை மணி நேரம், மூன்று பகுதிகளாக ஏழரை மணியாக எடுக்கலாமே. தடைகள் இப்பொழுது சிந்தனையில் தான் உள்ளன. நாளை பிறக்கப் போகும் நண்டுசிண்டுகள் அரகோன், சீயான் போல ஒரு வந்தியத் தேவன், மாமல்லன், அபிமன்யு என்று சொல்லட்டுமே. நம் பாட்டிகளுக்குதான் வசதியில்லை கைவிரித்துக் கதை சொன்னார்கள், நாம் படம் காட்டலாமே.

June 28, 2006

Superman Returns = சூப்பர் சுப்புனி ரிடர்ன்ஸ் : விமர்சனம்

சுடச்சுட பிரிவியூ ஷோ பார்த்துட்டு வந்தேன். X-men 1 & 2 எடுத்த பிரையன் சிங்கர் இயக்கத்தில் புது பொலிவுடன் சூப்பர்மேன். சற்று நீளமான படத்தில் எல்லோரையும் காப்பாற்றும் சூப்பர்மேன்தான் இந்த படத்தையும் காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும். சொத்தை படம்!
நெடுநாள் கழித்து திரும்பி வரும் சூப்பர்மேன் தான் விட்ட இடத்தில் இருந்து தன் வாழ்வை தொடங்க முயல்கிறார். அதே வேலை கிடைக்கிறது, அதே காதலிக்கும் ஆசைப்படுகிறார். படத்தின் ரசிக்கத்தக்க ஆனால் கடைசியில் புஸ்ஸாகும் வழக்கமான மொட்டை பாஸாக (எனக்குப் பிடித்த) கெவின் ஸ்பேசி, சூப்பர்மேனாக பிராண்டன் ரூத், லோய்ஸ் லேனாக கேட் பாஸ்வர்த் ஆகியோர் குறையில்லாமல் வேலை செய்திருக்கிறார்கள். பிரும்மாண்டமான சாகசங்கள் எல்லாம் பிரமிக்கும்படியாக காட்டுகிறார்கள். ஆனால் சரி இனி என்ன, எப்படி வில்லன் செக்மேட் செய்யப்போகிறான் என்று நாம் நிமிர்ந்து உட்காரும்பொழுது ஆட்டம்பாம் வெடிக்க நாம் காத்திருக்க சின்ன பிஜிலி வெடிப்பதுபோல் கிளைமேக்ஸ் சொத்தென்று முடித்திருக்கிறார்கள்.
படத்தில் நம்மூர் பாலிவுட் சொல்லப்போனால் கோலிவுட்டின் வாசம் நிறைய வீசுகிறது. வழக்கமான சூப்பர்ஹீரோ படம்போல் இல்லாமல் சற்று மண்வாசம் கலந்து இன்றைய ரசிகர்களை கவர சூப்பர்மேனின் உணர்ச்சிப்
போராட்டங்களை மையமாகவைத்து கதை பின்னப்போவதாக சொன்னார்கள். உணர்ச்சிகள்னா காதல் ரசத்த விடமுடியுமா? நம்ம கோலிவுட்ல மணிரத்னம் முதல் அனைவரும் சொல்லும் விஷயம் அதுதானே. சரி நிரைய காதல் சேர்த்து அப்படியே ஒரு தாய் செண்டிமெண்டும் சேர்த்துட்டா நம்மூர் ஃபார்முலா கிண்டிடலாம். ஆனா இங்கதான் ஹாலிவுட் ட்விஸ்ட்! தாய் செண்டிமெண்டிற்கு பதில் தந்தை செண்டிமெண்ட். என்ன நம்மூர் மாதிரி பாட்டுதான் மிஸ்ஸிங் (சொல்லமுடியாது ஹிந்தி/தமிழ் டப்பிங்கில் சேர்க்கலாம்). மத்தபடி இது சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் இல்லை, சூப்பர் சுப்புனி ரிடர்ன்ஸ்!

நீங்க கஜேந்திரா படம் பார்த்திருந்தா இந்த படத்தோட கதைக்கான க்ளூ உங்களுக்கு கிடைச்சாச்சு. உ-ம்: கஜேந்திராக்கு ஷாக் குடுத்தா அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்கும்! ஆனா கஜேந்திரா லெவலே வேற, புரட்சித்தலைன்னா சும்மாவா? :-D

April 21, 2006

கிலீவ்லண்ட் தியாகராஜ ஆராதனை

இந்த வாரம் 29வது தியாகராஜ ஆராதனை விழா கிலீவ்லண்டில் நிரைவுபெறுகிறது. ஆதலால் இந்த சனி, ஞாயிறு அங்கே செல்கிறேன், அளவான எதிர்பார்ப்புகளுடன். இரண்டு வருடம் முன்பு சென்றபோது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் மரத்தடியில். இதோ மீண்டும் அந்த கட்டுரை. [நன்றி: மரத்தடி.காம்].


கிலீவ்லாண்ட் ஆ(ஹா)ராதனை
கிலீவ்லாண்ட் அருமையான ஊர். இருபதுகளில் தட்பவெப்பம், ஏரிக்கரையில் இருப்பதால் மெல்லிய குளிர்காற்று. நமதவர்கள் குறைவில்லாத இடம். இந்த ஆராதனை தொடர்ந்து 26-ஆவது வருஷம் நடக்கிறது. சுகானுபவம். என்ன செய்தேன் போன வருடம், தெரியவில்லை.

பிரும்மாண்டமான அரங்கம். உள்ளே நுழைந்தவுடன் நிரம்பி வழியும் கூட்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. அரங்கத்தில் அருமையான சப்தம் சீராக வியாபித்திருக்கிறது (fantastic acoustics). கலைஞர்கள் எழுப்பும் ஒலியை மட்டும் தரும் துல்லியமான கம்பியற்ற ஒலிக்கருவிகள் (wireless mics etc...). வழ-வழவென்று மரத்தால் இழைத்த சுவர்கள். கூடவே மேலே உத்தரத்தில் எட்டு பிரும்மாண்ட உருளைகள் தொங்குகின்றன. இவை ஒலி எந்த ஒரு குறிப்பிட்ட திசையிலும் பிரதிபலிக்கப்பட்டு குவிந்துவிடாமலிருக்க அமைக்கப்பட்டிருந்தது. அரைவட்ட வடிவிலான மேடை, மேடை நோக்கி சார்பான மெத்தை இருக்கையமைப்பு (galary seating cushioned chairs) ரசிகர்கள் எந்த இடத்திலிருந்தும் மேடையை காண வசதியாக உள்ளது. மேடையின் பின்புறச் சுவரை வித வித அளவிலான புல்லாங்குழல்கள் அலங்கரிக்கின்றன. உத்தரத்திலிருந்து விளக்குகள் தற்கொலை செய்துகொல்லும் பாணியில் தொங்கிக்கொண்டு ஒளியைக் கொட்டுகின்றன. வித்வான்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கஷ்டமும் இல்லாத குளிர்வசதி. களைப்பில்லாமல் ரசிகர்கள் நாள்முழுதும் கச்சேரிகள் அநுபவிக்க இத்தனை அரங்க ஏற்பாடுகள்.

ஏற்பாடுகளை செவ்வன செய்திருக்கும் நிர்வாகத்தாரை பாராட்டியே தீரவேண்டும். கலைஞர்களை மட்டும் கவனிக்காமல் வந்திருக்கும் அனைத்து தரப்பினரையும் உபசரித்து விருந்தோம்பல் செய்தனர். முக்கியமாக சுந்தரம் மற்றும் நிர்வாக தரப்பினர் வித்வான்களை கௌரவித்த விதம் மனதை நெகிழ்வித்தது. இப்படியே செய்தால் இந்த ஆராதனை இன்னும் நூறு வருடங்களுக்கு கோலாகலமாக நடைபெறும்.

அரங்கமைப்பு மற்றும் இதர நிர்வாகங்களைப் போல் கச்சேரிகளும் சிகரத்தை தொட்டிருந்தால் இந்த வாரமும் சென்றிருப்பேன். ஒரு நாள் பந்தயத்தில் சச்சின் சதம் அடித்து கூடவே திராவிட், கங்கூலி, செஹ்வாக் அரை சதம் அடிப்பது போல் எதிர்பார்த்தால், சுதா மற்றும் லால்குடி முப்பது நாற்பதிலேயே ஆட்டமிழந்து ஸ்ரீகாந்தன் மட்டும் இந்த வயதிலும் அசாத்திய எண்பது அடித்த உணர்வே மிஞ்சியது.

வந்து குவிந்திருந்த மக்கள் ஏராளம். ஆண்களைவிட பெண்கள்கூட்டம் அதிகமாக தென்பட்டது (வயதுக் கோளாறு!). ஒரே பட்டுப்புடவை சலசலப்பு! நம்மவர்கள் எப்பொழுதும் போல் எளிமையாகக் குழாய் சட்டைகளில் பிரவேசித்தனர். குழந்தைகளின் ஆரவாரமும் குதூகலமும் நம்மை கவர்ந்திழுத்தது. "சுதா வெயிட் பொட்டிருக்கா.." போன்ற கச்சேரி வம்புகளுக்குக் குறைவில்லை. மொத்தத்தில் திருவிழாக் கோலம். ஓரு குறை. ரசிகர்களின் நாகரீகம் சில நேரங்களில் கீழ்த்தரமாகவே இருந்தது. அரங்கினுள் பானம் மற்றும் தின்பண்டங்கள் அனுமதியில்லை என்று அரங்கின் வாசலில் மற்றும் பல இடங்களில் தெளிவாக அறிவிக்கப்படிருந்தது. ஆனால் பலபேர் இதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தலைமைப் பாதுகாப்பு அலுவலர் தலையிட்டு அரங்கை மூடவிடுவேனென்று எச்செரிக்கை விடுத்தபின்தான் ஓரளவு குறைந்தது. கச்சேரி நடுவே கிசுகிசுப்பதும், கண்ட நேரத்தில் எழுந்துபோவதும், ஓரிடத்தில் உட்காராதீர்கள் என்று கேட்டுக்கொண்ட பின்பும் அவர் தலை மறைந்தபின் அங்கு ஆக்கிரமிப்பதும் மனதை ஏதோ செய்தன. மாபெரும் விழாவில் இந்த சின்ன நெருடல்களை, புலம் பெயர்ந்து வேறோர் சமூகத்தில் குடியிருக்கும் இவர்களின் இசை பிரியத்தை மனதில் கொண்டு மறந்துவிடலாம்.

மேற்கத்திய ராக் அண்ட் ரோலின் புகழ்பெற்ற ஹால் ஆஃப் ஃபேம் (Rock n roll- hall of fame) குடியிருக்கும் அதே கிலீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனை நடப்பது இசையுலகில் அதன் பெருமையை மேலும் கூட்டுகிறது. வருடத்தின் இதே நேரத்தில் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தால் தவறாமல் காணவேண்டிய நிகழ்ச்சி இது. டிஸ்னிலாண்ட், நயாகரா பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். போன ஜென்மத்தில் ஒரு பசுமாடு தானம் செய்தால் ஒரு கச்சேரி காணும் பாக்கியம் கிடைக்குமேன்றால், நான் இரண்டரை மாடுதான் தானம் செய்திருக்கிறேன். இன்னுமொரு பத்து இருபது செய்திருக்கலாம்.

March 26, 2006

ஹாலிவுட்டில் ரஹ்மான்?

நேற்று டென்சல் வாஷிங்கடன், ஜோடி ஃபாஸ்டர் மற்றும் க்ளைவ் ஓவன் நடித்த INSIDE MAN படம் பார்த்தேன். படம் ஆரம்பித்தவுடன் ஒரு இனிமையான அதிர்ச்சி! திடிர்னு தலைவர் ரஹ்மானோட தில்சே படத்தின் சைய்ய சைய்யா பாட்டு அலறுகிறது. ஆமாங்க என்னால நம்பவே முடியலை. படத்தோட ஆரம்பத்திலயும், முடிவுலயும் இரண்டு தடவையும் சைய்யா சைய்யா பாட்டு தான் பின்னனி இசை. கொஞ்சம் ரீமிக்ஸ் இருந்தது. ரஹ்மான் ஹாலிவுட்டில் பால் காய்ச்சியாச்சு. யாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்! <விவரங்கள் இங்கே>
தலைவரோட சைய்யா சைய்யா பாட்டுதான் பாலிவுட்டில் ரஹ்மானின் அடையாளமாக விளங்குகிறது. முந்தாநாள் தான் "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" தலைவரோட இசையில் டொராண்டோல அரங்கேற்றம் பண்ணியாச்சு. ஆனா மந்தமான வரவேற்புதான் போல.
இன்சைட் மேன் படமும் நல்ல ஜோரா இருக்கு. வசனங்களும் ஆஹா ஓஹோ ரகம்தான். ஸ்பைக் லீ படம், வேற எதுவும் சொல்லலை, வேணும்னா இங்கு முன்னோட்டம் பாருங்க. படம் கண்டிப்பா பாருங்க.

March 20, 2006

V for வேண்டாண்டா!


Matrix Trilogy கொடுத்த வாகோஸ்கி சகோதரர்கள் எழுதி/தயாரித்த, அவர்களிடம் துனை இயக்குனராக பணியாற்றியவரே இயக்கியிருக்கும் படம் . வாகோஸ்கி சகோதரர்களின் புரட்சிகரமான சிந்தனைகளுடன் இன்னுமொரு படம் (?). கொட்டகையில் பார்த்தே ஆக வேண்டுமென்று வெறியில்லை என்றால் வட்டு வந்தவுடன் பாருங்கள் போதும்.

V for Vendetta

அதிகாரபூர்வ தளம்
IMDB'ல்

கதை: வாழையடி வாழையாக சொல்லப்படும் கொடுங்கோல் ஆட்சி நடத்துபவனுக்கு எதிராக தனிய்யொரு மனிதன் எழுப்பும் புரட்சிக்கதைதான். திரைக்கதையில் ஆங்காங்கே பளிச். தவிர கதை 2020'ல் நடப்பதால் வைரஸ் தாக்குதல், அரசின் 24*7 கண்கானிப்பு போன்ற சமாச்சாரங்கள் இருக்கின்றன. கனிசமான அளவு ரத்தம் வழிகிறது. புரட்சிக்கூவல் விடுக்கும் முகமூடி மனிதனாக ஹியூகோ வீவிங், எதேச்சையாக இந்த புரட்சிப்போரில் உள்ளிழுக்கப்படும் பதுமையாக நேடலி போர்ட்மென் என்று எல்லா பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்க்கிறார்கள். தேவையான அளவு கிராஃபிக்ஸ் ஜாலங்கள்.

படத்தின் முக்கிய குறையே புரட்சியின் பிறப்பை சித்தரிப்பதில்தான். எல்லா தேர்ந்த கலைஞர்களையும் எப்போதாவது ஒருமுறையேனும் சுண்டியிழுக்கும் இந்த கதைக்களம்தான் பிரச்சினையே. சமீபத்தில் ஆய்த எழுத்தில் மணிரத்தினமும் சமூகத்தில் புரட்சிக்கான பிரத்தியேக ஃபார்முலாவை சித்தரிக்க முயன்று சுட்டுக்கொண்டது நினைவில் இருக்கலாம். தற்போதைய இந்த படம் நன்றாக தொடங்கியபின் பின்பாதியில் முடிவை நோக்கியிட்டுச் செல்லும்போது தொய்ந்துவிடுகிறது. மக்களின் கவனத்தை பெற்ற பின்பு அரசின் எதிர்ப்பைத் தாண்டி எப்படி தன் பக்கம் இழுக்கிறான் கதாநாயகன் என்பது நம்பும்படியாக இல்லை. 2020'ல் நிலவும் தொழில்நுட்பத்தை சித்தரிப்பதில் நிரைய கோல் விட்டிருக்கிறார்கள், ஸ்பீல்பெர்க் இந்த விஷயத்தில் கெட்டி.
படத்தின் மூலம் காமிக்ஸ் புக் என்றாலும் நான் அந்த காமிக்ஸை படித்ததில்லை. ஆனால் அந்த காமிக்ஸை உருவாக்கிய ஆலன் மூர் இந்த படத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். ஆகையால் 'வீ ' வாகோஸ்கி சகோதரர்களின் 'வீ ' ஆவான். மொத்தத்தில் இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தமைக்காக பாராட்டலாம் ஆனால் படம் நிரைவாக இல்லை.

March 10, 2006

1084'ன் தாய், ஆடமின் சகோதரி

"ஹசார் சௌராஸ்ஸி கி மா" மஹாஸ்வேதா தேவியின் புகழ்பெற்ற புதினம். இந்த புதினத்தை இதே பெயரில் கோவிந்த் நிஹ்லானி 1998ல் படமாக்கினார். எப்போதும் முகத்தில் புன்னகை தவழ நித்தம் தன்னை வளைய வந்துகொண்டிருந்த மகன் திடீரென்று ஓர் நாள் சவக்கிடங்கில் பிணமாக பார்க்கிறாள். போலீசுக்கு தன் மகனின் பிரேதத்தை அடையாளம் காட்ட செல்கிறாள். மகனின் பிரேதத்தின் என் 1084. இங்கு தொடங்குகிறது படம்.
நேற்று வரை உற்சாகமாக இருந்த தன் மகனா இது? என்ன ஆனது ஏன் நக்சலைட்டு இயக்கத்தில் பங்கு பெற்றான். இது நாள் வரை தனக்கு எப்படி தெரியாமல் போனது? அவன் நன்பர்கள் எல்லாம் யாரோ? பெயர்கள் தெரியும் ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களும் மாண்டுவிட்டார்களா? அவர்களின் பெற்றோர்கள் எப்படி இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள்? தான் கல்யாணம் செய்து கொள்ளபோவதாக சொன்ன பெண்னை அறிமுகம் செய்யாமலே போய்விட்டானே, அவள் என்ன ஆனாள்? இப்படியாக பிரேதம் 1084'ன் தாயாக தன் மகன் தன் கடைசி நாட்கள் கழித்த இடங்கள், மனிதர்களை சந்திக்க முற்படுகிறாள். தன் உயிரையே கொடுக்கும் அளவிற்கு தீவிரமாக இருந்த அவனின் இன்னொரு முகத்தை அறிய ஆசைப்படுகிறாள். நேர்மையற்ற தன் கணவன், சுயநலமே உருவான தன் மகளா, யார் காரணம்? ஏன் இவர்கள் யாருமே இவனை புரிந்து கொள்ளவில்லை? என்று இப்படியாக பயனிக்கிறது படம். தாயாக நடித்துள்ள ஜெயா பச்சன் அட்டகாசம். மகனாக நடித்த ஜோய் சென்குப்தா தேவலை. மகனின் காதலியாக நந்திதா தாஸ் பிரமாதம். மகனின் குறிக்கோளை தொடர்ந்து எடுத்துச்செல்ல தன் மீதி வாழ்நாளை அற்பனிக்கிறாள். படம் முடியும் போது நம் மனதும் கனமாகிவிடுகிறது. இந்த மசாலா படங்களிலிருந்து விடுதலையாகி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள். நல்ல பதினங்களை ஆதாரமாகவைத்து எடுத்தால் உருப்படியாக தரமான படங்கள் உருவாக்கலாம் என்பதற்கு இந்த படமும் ஓர் சான்று.
எப்பவோ பார்த்த படமிது. திடீரென்று ஒரு நன்பரின் வலைப்பதிவில் அவர் சமீபத்தில் மாண்ட தன்னுடைய நன்பன் ஆடமின் இழப்பைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த மாண்ட நபரின் தங்கை இந்த 1084'ன் தாயைப் போல் தன்னை நெருங்கவே விடாத புதிரான சகோதரனைப் பற்றி அறிந்துகொள்ள இப்படி இட்டுள்ளார்...

Why make a blog now?

I made this blog b/c i wanted to leave a comment on one of my brother's friend's page. sounds like a bad family relation doesnt it?

Anywho they wrote some stuff about Adam that obvisouly i felt deserved a comment. It was great stuff too. You see, I just lost my brother and i feel compelled to talk to his friends, idk why. I think i just want to know if he talked about me as much as i talked about him or maybe its more selfish then that. There was alot my brother kept from me alot he kept from everyone, his life was divided into sections and only on a need-to-know baises did he tell you something. So i guess thats why i want to comunicate with his friends, b/c its now or never. Ill never have the chance to "need-to-know" and him tell me. Also i want to know more about him, now that hes gone....its so hard to comprehend that word, gone...i want to know what others thought of him. I know he was great but thats enough i need to know that so many other people saw what i saw. anyway i think i have enough of this done so that i can go probably freak out some stranger that knew nother/little of me. Sorry Stranger, but if you really knew Adam then i think youll understand why.

இதை படித்தவுடன் நெஞ்சம் மீண்டும் கனத்துவிட்டது. அப்படியே 1084'ன் தாய் கண் முன்னே வந்து போனார்.

March 04, 2006

கணினியில் தமிழ்: தமிழா பதிவு

முகுந்தராஜின் முன்னின்று நடத்தும் திறவூல தமிழ் மென்பொருள் குழு தமிழா புதிய வலைப்பதிவு ஒன்று தொடங்கியிருக்கிறது. இங்கு கணித்தமிழ், தமிழ் மென்பொருட்கள் மற்றும் தமிழா சம்பந்தமான திட்டங்கள், தலைப்புகள் மற்றும் சிந்தனைகள் இடப்படும். மொத்தத்தில் கணித்தமிழுக்கான ஓர் கூட்டுப்பதிவு இது.
கணினியில் தமிழ்: இன்றைய நிலை பற்றி என் முதல் கட்டுரையை இங்கே காணலாம்.

February 28, 2006

ஒருங்குறி Collation = தேடுதல் + வரிசைப்படுத்தல்

இராம.கி ஐயா, VoW மற்றும் செல்வராஜ் ஆகியோர் ஒருங்குறியை பற்றி சமீபத்தில் நடத்திவரும் விவாதம் மிக முக்கியமானவை மற்றும் வரவேற்கத்தக்கவை. இது தொடர்பாக நம் புரிதலை மேம்படுத்த நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மேலும் சில விஷயங்கள்:
  1. ஒருங்குறி செந்தரம் (standard) என்பது பொதுவாக ஒருங்குறி குறியேற்றத்தை குறிப்பிட்டாலும் இதில் ஒன்றிற்கு மேற்பட்ட செந்தரங்கள் இருக்கின்றன. குறியேற்றம் (encoding), தேடல் + வரிசைபடுத்தல் (Collation) ஆகியவை தனித்தனியாக பிரித்தாளப்படுகிறது.
  2. அப்படியென்றால் இரண்டிற்கும் சம்பந்தம் இல்லையா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதை புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.
  3. குறியேற்றம் நிர்னயம் செய்யும்பொழுது collation'ஐயும் மனதில் வைத்துக்கொண்டுதான் செயல்படுகிறார்கள் ஆனால் எல்லா பிரச்சினைகளையும் குறியேற்றத்தாலேயே சரி செய்துவிட முடியாது.
  4. Collation சமாச்சாரங்களுக்காக தனியாக Unicode Collation Algorithm என்று ஒன்று இருக்கிறது. ஒருங்குறி குறியேற்றத்திற்கு பணிந்து செயல்புரியும் நிரலிகள் Collation'ஐயும் சரியாக செய்யும் என்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லை. இவை இரண்டும் தனித்தனி செந்தரங்கள்.
  5. ஒரு மொழிக்காக ஒருங்குறியில் இடம் ஒதுக்கப்பட்ட பின் ஒருங்குறி குழுமம் பொதுவாக எந்த மாற்றங்களையும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவர்கள் முடிந்தமட்டும் புழக்கத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட செந்தரங்களையே வழிகாட்டியாக பயன்படுத்துகிறார்கள். உ-ம்: IISCI.
  6. உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் குறியேற்றம் செய்வது அவர்கள் நோக்கமென்பதால் இப்பெரும் பனியில் சில தவறுகள், கவனக்குறைகள் ஏற்படுவது சாத்தியமே. இதனால்தான் சரியான அதிகாரத்துடன் சில மாறுதல்களை முன்வைத்தால் அதை பரிசீலிக்க ஏற்றுக்கொள்கிறார்கள்.
  7. ஏற்கனவே அளிக்கப்பட்ட இடத்தை அதிகரிக்கச் சொன்னால் மாற்றச் சொன்னால்தான் பொதுவாக மறுத்து விடுவார்கள். ஏனென்றால் ஒவ்வொரு மொழியையும் மொழியிலாளர்கள் ஆராய்ந்தபின்தான் இடமளிக்கிறார்கள் ஆகையால் பெருந்தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் கம்மி.
  8. ஆனால் அளிக்கப்பட்ட இடத்திற்குள் எழுத்துக்களின் வரிசை மாற்றம் அல்லது சின்னஞ்சிறு மாறுதல்கள் சொன்னால் ஏற்றுக்கொள்வதில் தடையில்லை.
இப்போது ஒருங்குறியில் தமிழ் பிரச்சினையை பார்க்கலாம்.
  1. ஒருங்குறி தமிழில் எல்லா உயிர்மெய் எழுத்துக்கள் அகரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப் படுகின்றன. உ-ம்: கி = க + இ. இது தவறு. இதை மாற்றவேண்டும். மெய் எழுத்துக்களே அடிப்படையாக இருக்கவேண்டும். கி = க் +இ என்பதே சரி, இதில் எந்த ஐயமுமில்லை.
  2. இன்னும் சில எழுத்துக்களின் வரிசையும் மாற்றியமைக்க வேண்டும்
  3. ஆனால் இதற்காக கொடுக்கப்பட்ட இடத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. இடத்தை அதிகரிக்க கோரிக்கை வைத்தால்தான் நிராகரிக்கப்படலாம். மேலே சொன்ன மாறுதல்களுக்கு தற்சமயம் உள்ள இடமே போதும்.
  4. இந்த மாறுதல்களை செய்தால் அடிப்படை தேடல் மற்றும் வரிசைப்படுத்தல் ஒழுங்காக வேலை செய்யும். இதற்கு பின்பும் உள்ள பிரச்சினைகளை Collation Algorithm செந்தரத்தில் மாற்றச் சொல்லலாம். அது சாத்தியமே தவிர அதுதான் சரி.
  5. இந்த பிரச்சினை ஏன் வந்தது? முறையாக IISCI வந்தவுடனே நாம் சரி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் தமிழை இந்தி போன்ற மொழிகளின் பார்வையிலிருந்து பார்ப்பதும் ஒரு காரணம்.
  6. முடிவாக எழுத்துக்களின் வரிசை மற்றும் மெய் எழுத்துக்களை புகுத்திவிட்டு அகரத்திற்கு ஒரு உருபை சேர்த்தாலே போதுமானது. மீதியை Collation செந்தரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இதுதான் துரிதமாக தற்போது இருக்கு வரையரையில் செய்ய இயலும். TUNE எல்லாம் கொஞ்சம் நடைமுறைக்கு அப்பார்பட்டது. நமக்கு பிரச்சினை சுமுகமாக சீக்கிரம் தீரவேண்டும் என்பதே குறிக்கோள். தவிர இதுதான் சமர்த்தான தீர்வாகும் TUNE அல்ல.
இன்னும் சரியாக புரிந்துக்கொள்ள தமிழ் இணையம் 2002'ல் கேதி விஸ்ஸிங்க் (Cathy Wissink) அவர்களின் கட்டுரைகளை படிக்கவும். (கட்டுரை 1, கட்டுரை 2).

(நான் இங்கு சொல்லியிருக்கும் தீர்வே சரியானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை அறிவேன்.)

February 01, 2006

உதவி தேவை: தமிழில் ஃபயர்ஃபாக்ஸ்

வணக்கம். தமிழ் கணிமைக்கு உங்கள் உதவி தேவை. இந்த ஃபயர்ஃபாக்ஸ உலாவியை தமிழில் கொண்டுவர சில ஆங்கில சரங்களை [english menu strings] தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட சரங்களை சரி பார்க்கவேண்டும். சரி, இதுக்கு நீங்க என்ன செய்யனும்?
  1. இங்க போய் ஒரு பயனர் கணக்கு ஒன்னு பதிவு செய்யுங்க. [Register/Login சுட்டி மேலே வலது பக்கம் இருக்கிறது]
  2. மொழிபெயர்க்க ஏதேனும் நிரைவடையாத கோப்பை தட்டுங்க.
  3. ஒவ்வொரு சரமா எடிட் செய்யுங்க. [இந்த பக்கதுல தமிழ்ல எழுத தனியா வேற எந்த மென்பொருளும் தேவையில்லை, இதனால நீங்க எங்கிருந்து வேணும்னாலும் வேலை செய்யலாம்]
  4. மொழிபெயர்க்கப்பட்ட் சரங்களை சரி பார்க்க முடியும்னா இங்க கமெண்டு போடுங்க, அதை ரெடி பண்ணிடலாம்.
அம்புட்டுதாங்க.

உங்களால முடியுமான்னு எல்லாம் யோசிக்காதீங்க. நீங்க ஒரு சரம் மொழிபெயர்த்தால் கூட அது பேருதவியே. ஊர் கூடிதாங்க தேர் இழுக்கணும். ஒரு நாளைக்கு ஒருத்தர் ஒரு பத்து நிமிடம் செலவிட்டு பத்து சரங்கள் செப்பனிட்டாலே போதும், முடிச்சுடலாம்.
இந்த உதவிக்கு முன்கூட்டியே தமிழா குழுவின் சார்பா நன்றி தெரிவிச்சுக்கறேன்.

நன்றி!

அப்படியே இந்த முயற்சிக்கு வித்திட்ட விக்னேசுவரன், காதர், முகுந்த்க்கு ஒரு சின்ன ஜே!

January 12, 2006

என் பெயர் ராமசேஷன்


என் பெயர் ராமசேஷன்

ஆதவன்

உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 200.
டிசம்பர் 2003, இரண்டாம் பதிப்பு.
விலை: ரூ.100
ISBN: 81-88641-18-9



நேற்றைக்குதான் முதன்முறை படித்தேன். எனக்கு வெகுவாக பிடித்திருக்கிறது. புத்தகத்தை பற்றி நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. என் வாசிப்பின் தொடர்பாக சில கருத்துகள்:
  1. ஆதவன் அவர்களின் படைப்புக்களை பற்றி அங்குமிங்கும் கேள்விப்பட்டாலும், மதி, இரா.மு & குழுவினர் நடத்திய புத்தகவாசகம்தான் என்னை இந்நூல் படிக்கத் தூண்டியது. மீனாக்ஸ், இரா.மு, மதிக்கு நன்றி.
  2. இந்த புதினத்தை படித்தவுடன் ஏனோ அய்ன் ராண்டின் ஃபவுண்டெய்ன் ஹேட் [Ayn Rand's Fountain Head] ஞாபகத்திற்கு வருகிறது.
  3. படிக்கும் பொழுது என்னை ஆச்சரியப் படுத்திய ஒரு விஷயம் - 1980'ல் எழுதியது என்றாலும் இன்றும் இந்த புதினத்தில் வரும் சில விவரங்கள், நையாண்டிகள் பொருந்துகின்றன. உ-ம்: ..."என்ன சொல்வதென்று தெரியவில்லை." "சொல்வதற்கு என்ன இருக்கிறது." "என்னவென்று சொல்வது நான்" என்று இப்படி ஏதேதோ (செய்திப் பத்திரிக்கை நிருபர்கள், ரேடியோ, டெலிவிஷன் நிருபர்கள் ஆகியோர் முன்னிலையில் 'மத்திய கிழக்கு' நிலைமை பற்றிக் கேட்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிபோல) பீடிகை வாக்கியங்கள் உதிர்த்தவாறிருந்தாரே தவிர ....
  4. நல்ல ஹாஸ்யம், கதைமாந்தர்களின் சுயவிசாரங்கள், வித்தியாசமான நடை + விவரனை ஆகியவை என்னை கவர்ந்த அம்சங்கள்.
படித்ததில்லை என்றால் கண்டிப்பாக படியுங்கள். விகடனில் கதாவிலாசத்தில் ஆதவனின் அறிமுகம்.

[புத்தகத்தை எனக்காக இந்தியாவிலிருந்து தருவித்த நன்பன் மும்மூர்த்திக்கு கடமைப்பட்டுள்ளேன்.]


January 06, 2006

2006: அடை ஆண்டு

அன்று மாலை ஞாயிற்றுக்கிழமை போல் அமைதியாக இருந்தது. இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்யலாமென்று மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்தேன். மதியம் பிரெட் சாண்ட்விச்சில் ஓடியது. சாதம், சாம்பார் வேண்டாம். ஏதாவது சிற்றுண்டி செய்யலாம் என்று நினைத்தேன். அவ்வளவுதான். மேலே வேறு யோசனையின்றி அடைக்கு ஊறப்போட்டேன். அப்படியே நினைவுகளையும் கொஞ்சம் ஆறப்போட்டேன்.

கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் ஒன்று புலப்படுகிறது, சிற்றுண்டிகளில் இந்த அடைக்கு நாம் அதற்குண்டான மரியாதையை கொடுப்பதில்லையோ. சற்று இவைகளைப் பாருங்களேன்.
"அம்மா நாளைக்கு காலை சீக்கிரம் கிளம்பனும்".
"சரிடா இட்லி பண்ணிடறேன்" - அம்மா
"என்னங்க சாயங்காலம் வர லேட்டாகும் தோசை மாவு ஃபிரிட்ஜில இருக்கு, பார்த்துக்கங்க..."

எப்போதும் அவசரத்திற்கு இட்லி, [அரைத்த] தோசையை தான் உதவிக்கழைக்கிறோம். இல்லை உடனடி தேவையாக இருந்தால் கரைத்த தோசை, உப்புமாதான். தெருவோர கடைகளில் கூட இட்லி தோசைதான் விற்கிறார்கள். இன்னும் இட்லி, தோசை, உப்புமா போன்ற திடீர் மிக்ஸ்கள் கிடைக்கின்றன் ஆனால் அடை மிக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறோமா? பொதுவாக அடை எப்போதும் சட்டென்று தோன்றும் தீர்வாக இருப்பதில்லை. இதற்கான காரணம்தான் என்ன? இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் இதற்கு அடையின் அடக்கமே காரணமென்று தோன்றுகிறது!

திருதராஷ்டிரன் சபையில் பீஷ்மரைப் போல் சிற்றுண்டிகளில் அடை. எல்லோரையும்விட வல்லவர் ஆனாலும் ஒரு அவையடக்கம். அடையில் அரிசிக்கு சமமாக அனைத்து பருப்புகளும் இருக்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் [தமிழ்ல என்னங்க?] புரதச்சத்து எல்லாம் வேண்டிய அளவு இருக்கிறது. ஊரப்போட்ட இரண்டு மணி நேரத்தில் அரைத்து வார்க்க அடைமாவு தயார். சாதாரணமாக ஒருவர் இரண்டு அல்லது மூன்று அடை உண்டாலே வயிறு நிரைந்துவிடும். இப்படி ஒரு முழுமையான பண்டமாக இருந்தாலும் அவசர யுகத்தில் தோசை இட்லியுடன் முண்டியடிக்காமல் ஒரு அடக்கம் [அதாங்க அவையடக்கம்] காக்கிறது. இதுவே இதன் சிறப்புமாகும்.

ஊறவைத்த ஒரு குவளை அரிசிக்கு ஒரு குவளை ஊறவைத்த பருப்பு [துவரை+கடலை+கொஞ்சம் உளுந்து] மிளகாய் வற்றல்கள், கொஞ்சம் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்த மாவில் இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து சற்று மிதமான தீயில் வார்த்தெடுத்தால் அடை தயார் [செய்முறைகள் இங்கே] . இதில் கொஞ்சம் கொண்டகடலை சேர்த்தரைப்பதும் ஒரு வகை. நவீன உனவுப் பதார்த்தங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பீட்சாவை போன்று அடையும் பல டாப்பிங்குகளில்[toppings] செய்யலாம். முருங்கைக்கீரை அல்லது கைக்கெட்டும் சில கீரைவகைகள், முட்டைகோஸ், காரெட், வெங்காயம் போன்றவை பொதுவாக பயன்படுத்தபடும் டாப்பிங்காகும். அடை வார்க்கும் கல்லில் ஒரு கரண்டி மாவைவிட்டு தோராயமாக வட்டவடிவில் அல்லது டெட்டிபேர் [teddy bear] போன்று தங்கள் கற்பனைக்கு எட்டும் வடிவில் தட்டி இந்த டாப்பிங் ஏதேனும் மேலே தூவவும். அடையின் ஓரத்தை சுற்றி எண்ணை/நெய் விடவும். அடை நன்றாக வேக நடுவிலோ அல்லது தங்களின் வடிவகணித ஞானத்தை பயன்படுத்தி வேறு தோதான இடங்களில் சில ஓட்டைகள் ஏற்படுத்தி ஓரிரு முட்டை எண்ணை விடவும். அடையின் மேற்பகுதிவரை வெந்தபின் அடிப்பகுதி நன்றாக சிவந்தவுடன் திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்களில் இந்தப் பக்கமும் சிவந்தவுடன் எடுத்தால் அடை சாப்பிட தயார். தயாரான அடை கீழே லா.ச.ரா வர்ணிப்பதுபோல் இருந்தால் பிரமாதம். அடையுடன் கூட சாப்பிட வெறும் வெல்லம் அல்லது மிளகாய்ப்பொடி மற்றும் அவியல், சாம்பார் போன்ற வெங்சனங்கள் மிக பிரபலம்.

இன்றைய தேதியில் ஒவ்வொரு நவீன சந்தைப் பொருளுக்கும் ஒரு மினி உரு இருப்பதுபோல் அடைக்கும் மினிஅடை உருவமொன்று இருக்கிறது. அதுதான் தவலைஅடை [கீழே படம் காண்க]. நவீன பண்டங்களின் மற்றொரு அடையாளமான வெரைட்டியும் அடைக்குள்ளது. கோதுமை அடை, கேள்வரகு அடை [லோ ஃபேட் வெரைட்டி] போன்ற பலவித அடைகள் உள்ளன. மொத்தத்தில் காலங்காலமாக இருந்துவரும் ஒரு பண்டமானாலும் டாப்பிங்குகள், மினிசைஸ், வெரைட்டி போன்ற அம்சங்களால் நவீன யுகத்திற்கு ஏற்ற உனவுதான் அடை என்பதில் ஐயமில்லை.

அடையைப்பற்றி இன்னும் சில புள்ளி விவரங்கள்:
  • தோசை, இட்லி இவைகளை வார்க்கலாம், குத்தலாம் ஆனால் அடையை மட்டுமே தட்டலாம். :-D
  • காரடையான் நோன்பு என்று அடையின் முக்கியத்துவத்தை ;-) குறிக்கும் ஒரு சடங்கே உள்ளது. சிற்றுண்டி உலகில் அடைக்கு மட்டுமே இந்த பெருமையுண்டு.
  • அடைமொழி, அடை மழை போன்று தனிச்சிறப்பான பிரயோகங்கள் அடைக்கு மட்டுமே உண்டு.
ஆக அடையின் அடக்கத்தால் அடைக்கு அடக்கம் நடந்துவிடாது என்பது நிச்சயம். நவீன யுகத்தில் அடை இன்னும் கவர்ச்சிகரமான விருப்பமாக மாறும்நாள் வெகுதூரத்தில் இல்லை. இதனை மனதில்கொண்டு 2006ஆம் ஆண்டு அடையின் ஆண்டாக அனுசரிப்போம்.

* * * * * * * * * * * *

"டேய் எழுந்திருடா. என்னடா அடைக்கு ஊறப்போட்டுட்டு தூங்கிட்டையா? என்ன கனவுலகத்துல யாரப்பத்தி யோசனை?"

"ஹி..ஹி..எல்லாம் அடையை பத்திதான்!!!"

January 04, 2006

இந்திய நிலத்தடி நீர் => கோககோலாவிற்கு தடை

இங்கே மிஷிகன் பல்கலைகழகத்தில் கோக்கிற்கு தற்காலிக தடை. [ The Michigan Daily ] [Yahoo News] இந்தியாவில் கோககோலாவினால் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதாக நிலவும் சாடல்களை ஆதரித்து மற்றும் கொலம்பியாவில் அடியாட்களுடன் தொழிற்சங்கத்தின் அங்கத்தினரை நாசம் செய்வது போன்ற செயல்களை கண்டித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமாக இருந்தாலும் பாராட்டுக்குரியது. நம்மூரிலும் விழித்துக்கொண்டால் நன்றாக இருக்கும்! ஹும்ம்ம்ம்ம்ம்.....!